கோவிட் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு - யாழ்ப்பாண விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அடுத்த மாத நடுப்பகுதியில் விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முடக்கப்படுவதற்கு முன், கொழும்பு-இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம்-பலாலி விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இரண்டு தடவை விமானங்கள் இயக்கப்பட்டன. கோவிட் தொற்றுநோய் காரணமாக அதை மீண்டும் ஆரம்பிக்க முடியவில்லை. சுகாதார வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு விமான சேவைகளை மீண்டும் தொடங்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தியுள்ளார். கோவிட் தொற்றுநோய் பரவுவதற்கு முன்னர் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் வாரமிரு தடவை செயற்பட்ட இந்த உள்நாட்டு சேவையை, தினசரி விமான சேவையாக மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், கோவிட் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் - சென்னை நேரடி விமானங்களை விரைவாக மீண்டும் தொடங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இச்சேவை சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடைமுறைப்படுத்தப்படும். யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தியிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது இது கோவிட் சூழ்நிலையால் தடைபட்டிருக்கின்றது. எதிர்காலத்தில் அது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும்.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின்போது தாபிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு ஏர் சிலோன் இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக மாறியதுடன், தென்னிந்திய நகரங்களுக்கு விமானங்களை இயக்கியது. 1980 க்குப் பிறகு பலாலி விமான நிலையத்தின் சேவைகள் புலிகளின் பயங்கரவாதத்தால் தடைபட்டதுடன், 2002 இல் அது விமானப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின், 2010 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இதனை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.