ஏர்பிரான்ஸ் விமான சேவை நவம்பர் 05 முதல் இலங்கைக்கான வர்த்தக விமானங்களை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. அதன்படி, நவம்பர் 05 ஆம் தேதி முதல் பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கிடையே வாரத்திற்கு மூன்று நேரடி விமானங்களை இயக்க நிறுவனம் முன்வந்துள்ளதென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பிரான்சின் பாரிஸ் நகரில் தற்போது நடைபெறும் சர்வதேச பிரெஞ்சு சுற்றுலா கண்காட்சியில் கலந்து கொண்ட ஏர் பிரான்ஸ் விமான சேவை பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையே நடந்த விஷேட கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இந்த கலந்துரையாடல், கடந்த 05 ஆம் திகதி மேற்படி நிகழ்வின்போது இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கண்காட்சி கூடத்தில் இடம்பெற்றது.
திட்டமிடப்பட்ட விமான சேவையை விரைவுபடுத்துவது மற்றும் ஏர் பிரான்ஸ் மூலம் இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு விஷேட நிவாரணப் பொதியை வழங்குவது குறித்து இலங்கை மற்றும் பிரான்ஸ் தரப்புகளுக்கிடையே உடன்பாடொன்று எட்டப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். அதன்படி, சம்பந்தப்பட்ட விஷேட நிவாரணப் பொதி நாட்டில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இலங்கைக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏர் பிரான்சும் ஒப்புக் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஏர் பிரான்ஸ் உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாகும். 1933 இல் நிறுவப்பட்ட இந்த விமான நிறுவனம் இந்த ஆண்டுக்கான Sky Trax உலக விமான போக்குவரத்து விருதை வென்றுள்ளது. ஏர் பிரான்ஸ் ஐரோப்பாவின் சிறந்த விமான நிறுவனமாகவும், சுகாதாரத்தின் அடிப்படையில் விஷேடமாக விரும்பப்படும் விமான நிறுவனமாகவும் பெயரிடப்பட்டுள்ளது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடனான கலந்துரையாடலில், ஏர் பிரான்ஸ் பணிப்பாளர் நாயகம் (தூர விமான சேவை) Zoran Jelkic, ஆசிய பசிபிக் வர்த்தக அபிவிருத்தி பணிப்பாளர் Francois Giudicelli மற்றும் சுற்றுலாத்துறை செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.