வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கை ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று மணி நேரத்தில் முடிவுகளை வழங்கும் கட்டுநாயக்கவில் உள்ள பிசிஆர் ஆய்வகத்தில் சேவை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, நேற்று (25) மாலை 06.30 மணிக்கு துபாயிலிருந்து இலங்கை வந்திறங்கிய எமிரேட்ஸ் விமானம் EK 652 இல், 53 பயணிகளுக்கு முதல் பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களில் இலங்கையர்களும் சுற்றுலாப் பயணிகளும் அடங்குகின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட விசேட கவுண்டர்களில் பதிவு செய்யப்பட்ட பின்னர், இந்தக் குழுவினர் விமான நிலையத்திலிருந்து 18 வது தூண் அமைவிடத்திலுள்ள பிசிஆர் ஆய்வகத்திற்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். தேவையானவர்களை அழைத்துச் செல்ல விமான நிலைய வாடகைக் கார்களும் பயன்படுத்தப்பட்டன. பிசிஆர் அறிக்கைகளில் கோவிட்-19 இனால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர், சுற்றுலா பயணிகளுக்கும் இலங்கையர்களுக்கும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி சமூகமயமாகுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
முதல் தொகுதியின் முடிவுகளை 3 மணி நேரத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் அவர்களின் கைப்பேசிக்கு அனுப்பப்பட்டது.
ஜூலை 09 அன்று, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, குறித்த ஆய்வகத்தை நிர்மாணிக்க ஒப்புதல் கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோர் அடங்கிய அமைச்சரவையால் இப்பத்திரம் அங்கீகரிக்கப்பட்டது. 05 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் இந்த பிசிஆர் ஆய்வகமானது விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் மற்றும் ஒக்ஸினோம் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் நிர்மாணிக்கப்பட்டது. பிசிஆர் ஆய்வகத்தின் நிர்மாணம் ஜூலை 23 அன்று தொடங்கியிருந்தது.
ஒரு மணி நேரத்திற்கு 500 பிசிஆர் சோதனைகள் மற்றும் ஒரு நாளைக்கு 7,000 பிசிஆர் சோதனைகள் நடாத்த வசதி கொண்ட இந்த ஆய்வகம் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் 18 வது தூண் அமைவிடத்தில் அமைக்கப்பட்டு, கடந்த 23 ஆம் தேதி சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவால் திறந்து வைக்கப்பட்டது. இது முதலில் சுற்றுலா பயணிகளை மட்டும் இலக்காகக் கொண்டிருந்தாலும், பின்னர் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கும் பிசிஆர் சோதனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ள இலங்கையர்களுக்கான சோதனைகளுக்காக கட்டணங்களை செலுத்துவதற்கு பணியகம் ஒப்புக் கொண்டுள்ளது. மேற்படி கலந்துரையாடல், சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தொழில்அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நேற்று (25) மாலை முதல் வந்திறங்கும் அனைத்து விமானங்களிலும் வரும் பயணிகள் தற்போது இந்த ஆய்வகத்தில் பிசிஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும், சகல விமானப்பயணிகளும் தங்களின் பிசிஆர் சோதனைகளை எந்த இடையூறுமின்றி இவ்விடத்தில் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை 06.30 மணியளவில் இலங்கை வந்திறங்கிய துபாய் விமானத்தின் பயணிகளின் பீசீஆர் சோதனையின் செயல்முறையை அவதானிக்க, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தவிசாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி பிரதித் தவிசாளர் ரஜீவ் சூரியாராச்சி மற்றும் பிற அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். விமான நிலையத்தில் பயணிகள் வந்திறங்கிய இடத்திலிருந்து பிசிஆர் சோதனை வரை முடிவுகள் பெறப்படும் வரை முழு செயல்முறையும் சுற்றுலாத்துறை அமைச்சரால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டதுடன், சில நடைமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்குவதையும் அவதானிக்க முடிந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இந்த பீசீஆர் ஆய்வகம் சுற்றுலா பயணிகள் மற்றும் இலங்கையர்களுக்கு மிகவும் முக்கியமானதெனக் குறிப்பிட்டார். சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக தற்போதுள்ள சுற்றுலா கட்டுப்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், அரசின் கொள்கைத் தீர்மானத்தின்படி ஆய்வகம் அமைக்கப்பட்டதாகவும் கூறினார். கடந்த ஜூலை மாதம் முதல் அரசாங்கம் இதற்காக செயலாற்றி வருகின்றதெனவும், கோவிட்-19 காரணமாக பொருளாதாரத்தில் சரிவடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப சரியான முறையில் இதை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இது நிர்மாணிக்கப்பட்டதெனவும் அமைச்சர் மேலும் கூறினார். எதிர்க்கட்சிகள் மற்றும் வேறு சிலரின் கூற்றுப்படி, இது போன்ற ஆய்வகங்களை அவசரமாக செயல்படுத்த முடியாது என்றும், கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
"நாங்கள் கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராடுகிறோம். நாம் நினைப்பது போல் இங்கு செயல்பட முடியாது. நீங்கள் இதை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். அவசரப்பட்டு தொற்றுநோய்களுக்கு தீர்வு காண முடியாது. இப்போது நாங்கள் இதை ஆரம்பித்திருக்கின்றோம். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களை நாங்கள் அறிவோம். அதன்படி, பிரச்சினைகள் எழுந்தால் அவற்றுக்கான நடைமுறை தீர்வுகளைக் காணுவதுடன் இந்நடவடிக்கையை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.