இலங்கையின் விளையாட்டு சுற்றுலாத்துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், 2026 FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் உத்தியோகபூர்வ FIFA Fan Zone 2026 நேற்று (11) கொழும்பு கோட்டை, கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலுக்கு முன்பாக உள்ள யோர்க் வீதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கையில் கால்பந்தாட்டத்தின் எதிர்கால முன்னேற்றம், விளையாட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து அமைச்சர் விரிவாக விளக்கமளித்தார்.

அமைச்சர் தனது உரையில், இலங்கையில் சர்வதேச தரத்திலான கால்பந்து மைதானம் ஒன்றை அமைப்பதற்கான நிதி உதவியை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு FIFA துணைத் தலைவர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், இலங்கை முதலீட்டு சபைக்கு சொந்தமான நீர்கொழும்பு கடோல்கலே (Kadolkale) விளையாட்டு மைதானம் இந்த திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டம் நிறைவேறுவதன் மூலம் எதிர்காலத்தில் சர்வதேச கால்பந்து போட்டிகளை இலங்கை நடத்தும் வாய்ப்பு உருவாகும் என்பதுடன், நீர்கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் சுற்றுலாத்துறைக்கும் குறிப்பிடத்தக்க ஊக்கமாக அமையும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

கிரிக்கெட்டைப் போலவே கால்பந்தாட்டத்தையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதன் மூலம், இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத விளையாட்டு சுற்றுலாத்துறையை விரைவாக வளர்த்தெடுக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். உலகளாவிய பல்வேறு சவால்கள் நிலவினாலும், இலங்கையின் தனித்துவமான விருந்தோம்பல் மற்றும் பண்பாட்டு பாரம்பரியம் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் நாட்டிற்கு வருகை தருவதாகவும், கடந்த மே 31ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வு நடைபெறும் கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல், 1837ஆம் ஆண்டு தொடக்கம் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியச் சின்னமாகும் என்றும், அது உள்ளூர் மட்டுமல்லாது சர்வதேச தலைவர்களாலும் மதிக்கப்படும் முக்கியமான கட்டிடமாகும் என்றும் அமைச்சர் கூறினார். இலங்கை வங்கி நிர்வகிக்கும் இந்த வரலாற்று ஹோட்டலை நவீன வசதிகளுடன் மேம்படுத்த அமைச்சரவை ஏற்கனவே தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை நேரலையாக ரசிப்பதோடு, கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலின் வரலாற்றுப் பெருமையையும் அனுபவித்து, அன்றாட பணிச்சுமையிலிருந்து ஓய்வெடுக்க கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் அனைத்து கால்பந்து ரசிகர்களும் எதிர்வரும் நாட்களில் இந்த FIFA Fan Zone வளாகத்திற்கு வருகை தருமாறு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

இந்த சிறப்பு நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல் நிர்வாகம் மற்றும் "York Street Live" குழுவினருக்கு அமைச்சர் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

 

சுற்றுலா அமைச்சின் செய்திகள்

Sri Lanka Convention Bureau’s Roadmap for a Knowledge-Driven MICE Sector

During the first half of 2026, the Sri Lanka Convention Bureau (SLCB), through its Research, Development & Training Division, successfully implemented a series of capacity-building initiatives aimed at strengthening Sri Lanka's Meetings, Incentiv

Continue Reading

Sri Lanka Tourism Showcases Progress Across Key Sectors – July 2026

Sri Lanka Tourism continues to strengthen its global presence through a series of impactful initiatives and achievements across wellness, marine, cultural, educational, and business tourism. The Sri Lanka Tourism Promotion Bureau (SLTPB) has recently

Continue Reading

எதிர்வரும் நிகழ்வுகள்

Exit
மாவட்டம்