இலங்கைக்கான சைப்ரஸ் குடியரசின் புதுதில்லி வதிவிட உயர்ஸ்தானிகர் எவாகோராஸ் வ்ரியோனிடீஸ் (Evagoras Vryonides) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (08.06.2026) மாலை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, இலங்கையர்களுக்கான சைப்ரஸின் வேலைவாய்ப்பு சந்தையை விரிவுபடுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்கு சைப்ரஸ் அரசின் சார்பில் உயர்ஸ்தானிகர் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், சைப்ரஸில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு கணிசமான தேவை காணப்படுவதாகவும், குறிப்பாக தாதியியல் (Nursing), சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை (Hospitality), விவசாயம்(Agriculture) , கட்டிட மற்றும் நிர்மாணத் துறை(Construction), கடல்சார் துறை (Marine) ஆகியவற்றில் பயிற்சி பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வாய்ப்புகளை இலங்கையர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இரு நாடுகளுக்கிடையிலான தேவையான உடன்படிக்கைகளை விரைவில் கையெழுத்திட தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.
இதற்கு முன்னர் சைப்ரஸில் பணியாற்றி தற்போது இலங்கைக்கு திரும்பியுள்ள, 65 வயதை எட்டிய இலங்கையர்கள் பெற்றிருக்க வேண்டிய சமூகப் பாதுகாப்பு நலன்கள் (Social Security Benefits) பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் அமைச்சர் உயர்ஸ்தானிகரின் விசேட கவனத்தை ஈர்த்தார்.
பாதிக்கப்பட்டுள்ள பலர் இதுகுறித்து தம்மிடம் முறையிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்த பிரச்சினையில் உடனடி தலையீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர் எவாகோராஸ் வ்ரியோனிடீஸ், குறித்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அமைச்சர் விஜித ஹேரத்தை சைப்ரஸ் அரசு அன்புடன் வரவேற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்த உயர்ஸ்தானிகர், சைப்ரஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறும் அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்.
ஊடகப் பிரிவு
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு – 01
2026 ஜூன் 09

