இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க 07 விமான நிறுவனங்கள் தயாராகி வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் அந்த விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையைத் தொடங்கும் என்று அவர் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
இவற்றில் 05 விமான நிறுவனங்கள் ஏற்கனவே கட்டுநாயக்க விமான நிலையத்தில் செயல்பட ஒப்புக்கொண்டன. ரஷ்யாவின் AEROFOLT ஏர்லைன்ஸ் நவம்பர் 04 ஆம் திகதி விமான சேவையைத் தொடங்க உள்ளது. ரஷ்ய விமான நிறுவனமான AZURAIR நவம்பர் 11 ஆம் திகதி விமானங்களைத் தொடங்க உள்ளது. அவர்களின் சிறப்பு விமானங்கள் வரும் 30 ம் தேதி தொடங்க உள்ளது. இத்தாலிய விமான நிறுவனமான NEOS மற்றும் பிரெஞ்சு விமான நிறுவனமான AIRFRANCE ஆகியவை நவம்பர் 01 ஆம் தேதி முதல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புதிய விமானங்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. பங்களாதேஷ் US BANGLA AIRLINES நவம்பர் 01 ஆம் தேதி முதல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமானங்களைத் ஆரம்பிக்க உள்ளது.
இஸ்ரேலின் ARKIA மற்றும் சுவிட்சர்லாந்தின் SWISSAIR ஆகியவை, இலங்கையுடன் நேரடி விமான சேவைகளைத் தொடங்க தயாராக இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எதிர்காலத்தில் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போது 16 விமான நிறுவனங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் சேவைகளை நடத்துகின்றன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் சரக்கு சேவைகளை 08 விமான நிறுவனங்கள் இயக்குகின்றன. 04 விமான நிறுவனங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சிறப்பு விமானங்களை இயக்குகின்றன.
இதற்கிடையில், 04 சர்வதேச விமான நிறுவனங்களும் மத்தள விமான நிலையத்தில் புதிய செயல்பாடுகளைத் தொடங்க பரிசீலித்து வருகின்றன. இது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் 04 விமான நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தில் இருந்து விமான சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
சுகாதார வழிகாட்டுதல்கள் தளர்த்தப்படுவதால் அதிக சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே பல சிறப்பு சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டங்களை ஐரோப்பிய நாடுகளில் செயல்படுத்தி வருகிறது. வரவிருக்கும் குளிர்காலத்தில் இலங்கைக்கு அதிகமான ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இதன் நோக்கம். அதன்படி, சுற்றுலா கண்காட்சிகள் செயல்பாடுகள் மற்றும் அந்நாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் இலங்கையைப் பற்றி விரிவான விளம்பரங்களை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.